விஜயவாடாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் நேற்று மின்சார ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டில் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக ஆன் செய்து விட்டு தூங்கி விட்டார். அப்போது வீட்டில் அவருடன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர். இன்று அதிகாலை அந்த ஸ்கூட்டர் பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பிடித்து எரிந்தது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவக்குமார் நேற்று மின்சார ஸ்கூட்டர் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அதன் விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நடக்கும் 2-வது சம்பவம் இதுவாகும். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
பெட்ரோல் விலை உயர்வு, சுற்றுச் சூழல் மாசு காரணமாக மக்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற விபத்துகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.